Pages

Friday, September 16, 2005

கண்ணன் பாடல்கள் - 2 - வேண்டினேன் உனை வேண்டினேன்

கண்ணன் பாடல்களில் குழந்தை கண்ணன் பல ஆயர் குலத் தாய்மாரை வசீகரித்து இருப்பதாக சொல்லப் படுகிறது. முக்கால்வாசி பாடல்களில் அவன் வந்து வெண்ணையை திருடி உண்டான், அதை நான் கண்டும் காணமல் விட்டு விட்டேன் என்று சொல்வது போல் அமைந்து இருக்கும். என் மனதில் ஒரு சிறிய கற்பனை.

ஒரு ஆயர் குலத் தாய், தன் பிள்ளைகள் தாயமுது உண்ணாமல் சண்டித்தனம் செய்வதை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது கண்ணன் தவழ்ந்து அங்கே வர அவளது தாய்மை பீறிட்டு எழுகின்றது. அதன் விளைவாக அவளிடம் பால் சுரக்கின்றது. குழந்தை கண்ணன் அதனை கண்டு வந்து பருகுகின்றான். இக்காட்சியைக் கண்டு அத்தாயின் பிள்ளைகளும் ஓடி வந்து பால் அருந்துகின்றன. இதை கண்டு அவள் மிகவும் ஆனந்தப் படுகிறாள்.

உண்ட பின்னே அக்குழந்தைகள் கண்ணனோடு அவள் உடல் மீதேறி விளையாடும் போது கடைவாய் நீர் வடிகின்றது. அதனை காணும் அந்தத் தாய் மனம் மிக மகிழ்ந்து "தாய்மையின் இன்பங்கள் தான் என்னே! அதனை கண்ணன் மூலமாக இன்று முழுவதும் அடைந்தேன். யசோதா, இப்படிப்பட்ட கண்ணனை சில நேரம் தினமும் எனக்குக் கடனாகத் தருவாய" என்று கேட்கிறாள்.

இந்தப் பாடலை ஆபோகி ராகத்தில் மெட்டமைத்தும் இருக்கிறேன். அதனைப் பின்னர் தருகிறேன்.

பல்லவி:
========

வேண்டினேன் உனை வேண்டினேன் - தினம்
கண்ணனை சில நேரம் கடனாகத் தா - யசோதா

சரணம் 1:
===========

நீ அறியாமல் அவன் என் வாயிலில்
கொலுசுகள் குலுங்க தவழ்ந்து வந்தான்
நான் அறியாமல் என் தாய்மையும் கிளர்ந்து
பாலினைப் பொழிய பருகி நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
வந்தன தங்கள் வன்பசி போக்க

கண்ணனால் அவரும் உண்டு மயங்கிட -என்
கண்ணிலே ஒர்குளம் ததும்பி வழிந்தது

சண்டியப் பிள்ளைகளும் சமர்த்தென ஆனது

சரணம் 2:
===========

பிள்ளைகள் எல்லாம் உண்ட பின்னெ - என்
உடல்மீதேறி அமர்ந்தனவே
கண்ணனும் மெல்ல ஏறி நின்றான் -தன்
பிஞ்சு பதங்கள் வைத்து நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
நின்றன தாமும் தன் பதத்தாலே

கண்ணனும் பிள்ளையும் கால் கொண்டு உதைத்திட
கடைவாய் அமுத நீர் கசிந்து விழுந்திட

தாய்மையின் சிகரங்கள் நான் கண்டேன்

2 comments:

  1. Pallavi is very good, vaarthaiye illai pugzharthukku.

    ReplyDelete
  2. Nalini:

    enakku kuzandhaik kaNNan miugavum pidiththa kadavul / kavithai karu. ungaLukku kaNNan ppidikkum illiiya ? :)

    ReplyDelete